அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெறும் சமூக விரோத செயல்களால் மாணவர்கள் அச்சம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 10 February 2024

அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெறும் சமூக விரோத செயல்களால் மாணவர்கள் அச்சம்.


மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே அயப்பன் நாயக்கன்பட்டியில், அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அயப்பன் நாயக்கன்பட்டி, குருவித்துறை கோவில், குருவித்துறை, மன்னாடிமங்கலம், கண்ணுடையாள்புரம், தாமோதரன்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் 

இந்த பள்ளிக்கு அருகில், மிகவும் பழுதடைந்த நிலையில் மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. இந்த தொட்டியானது, பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வரும் நிலையில், இந்த  தொட்டியின் உள்ளே சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக இந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தினமும் காலை மாலை மற்றும் இரவு நேரங்களில் மது பிரியர்களின் அட்டாசத்தால்  செயல்படாத குடிநீர் தொட்டியின் உள்ளே காலி மது பாட்டில்கள்  பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் உடைந்த நிலையில்  பாட்டில் சிதறல்கள் மற்றும் கஞ்சா போன்ற போதை வஸ்துகளின் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவைகள் குவிந்து கிடக்கின்றன.


இதன்  அருகிலேயே, அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்படுவதால் இங்கு படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரு வித அச்சத்துடன் பள்ளிக்கு வரக்கூடிய நிலை உள்ளது. இதனால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர்.


இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான வி.பி.கந்தசாமி கூறும் போது, இந்த செயல்படாத குடிநீர் மேல்நிலை தொட்டியானது, பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் உபயோகமில்லாமல் இருந்து வருகிறது. இது குறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், ஊராட்சிக்கு சொந்தமான இந்த செயல்படாத குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து விட்டு அந்த இடத்தில் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும், தினமும் காலை மற்றும் மாலை இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். ஏனென்றால், இங்கு சமூக விரோத செயல்கள் அதிகரித்து உள்ள நிலையில், அருகில் படிக்கும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்று தெரிவித்தார். ஆகையால், மாவட்ட நிர்வாகம் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு , பழுதடைந்த குடிநீர் மேல்நிலை  தொட்டியை இடித்து, சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad