பிறருக்கு எதிர்பார்ப்பின்றி உதவினால் தக்க சமயத்தில் நமக்கு உதவி தேடி வரும்: காவல்துறை ஓய்வு துணை ஆணையர் ஆ.மணிவண்ணன் பேச்சு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 7 April 2024

பிறருக்கு எதிர்பார்ப்பின்றி உதவினால் தக்க சமயத்தில் நமக்கு உதவி தேடி வரும்: காவல்துறை ஓய்வு துணை ஆணையர் ஆ.மணிவண்ணன் பேச்சு.


எதிர்பார்ப்பின்றி 10 பேருக்கு உதவி செய்தால், ஆயிரம் பேர் தக்க சமயத்தில் நமக்கு தேடி வந்து உதவி செய்வர் என, காவல்துறை துணை ஆணையர் ஆ.மணிவண்ணன் பேசினார்.

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் 'புதுயுகம் நோக்கி' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் ஜே.சி., அரங்கில்  நடைபெற்றது. சங்கத்தின் பட்டயத் தலைவர் நெல்லை பாலு தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட செயலாளர் சாந்தாராம், 'அத்வி மீடியா' ஆதவன், 'விநாயகா இம்பெக்ஸ்' மகேந்திரன், வழக்கறிஞர் கார்த்திக் உள்பட ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


சென்னை பெருநகர தலைமையிட காவல் துணை ஆணையர் முனைவர் மணிவண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ரோட்டரி முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்ரீரெங்கநாதன் அவருக்கு 'வோக்கேசனல் எக்ஷலன்ஸ்' விருதினை வழங்கினார்.


அப்போது, மணிவண்ணன் பேசியதாவது: "மக்கள் சேவை செய்யும் பணிகள் பல இருந்தாலும், காவல் துறையின் பணி அதில் குறிப்பிடத் தகுந்தது. மக்கள் பலருக்கும் சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் ,அதை எப்படி செய்வது என்பது தான் தெரியவில்லை. இதனால், அவர்கள் பிறருக்கு உதவி செய்யாமலேயே போய் விடுகிறது. அதைத் தவிர்க்க, மக்கள் பணி செய்கிறவர்களோடு அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.


சேவை செய்வதில் சுயநலம் கூடாது என்றாலும், கூட, அது நிச்சயம் உங்களுக்கு நல்லதைத் திருப்பி கொடுக்கும். 10 பேருக்கு ஆத்மார்த்தமாக நாம் நல்லது செய்தால், நமக்கு தெரியாத ஆயிரம் பேர் தேவையான சமயத்தில் நமக்கு தேடி வந்து உதவி செய்வர். பிறர் நமக்கு உதவுவர் என்ற எண்ணம் இல்லாமல், சேவை மனப்பான்மையோடு மக்கள் சேவை செய்யுங்கள். அது உங்களை மட்டுமின்றி உங்கள் தலைமுறையையும் வாழ வைக்கும்." இவ்வாறு அவர் பேசினார். ரோட்டரி சங்க பொறுப்பு செயலாளர் 'ஐ கேட்ச்' சண்முகம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad