தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை வெற்றி பெற செய்யாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் - அமைச்சர் பி.மூர்த்தி உறுதி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 25 March 2024

தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை வெற்றி பெற செய்யாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் - அமைச்சர் பி.மூர்த்தி உறுதி.


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்  தங்கதமிழ்செல்வன் அறிமுக கூட்டம் பத்திரபதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். 


கூட்டத்தில் கலந்து கொண்ட பத்திரபதிவு துறை அமைச்சர் பி.முர்த்தி பேசியதாவது, தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும். 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற முடியாவிட்டால் மறுநாளே  நான் எனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்வேன் என ஆவேசமாக பேசினார். 


மேலும் அவர் பேசியதாவது, உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும், கட்சிக்கு சிலர் துரோகம் செய்து வருகின்றனர். சோழவந்தான் தொகுதியில் நான் உழைத்ததால் தான் நான் தற்போது அமைச்சராக பதவி உயர்ந்துள்ளேன். எனவே கட்சியினர் துரோகம் செய்யாமல் உண்மையாக வேட்பாளர்களுக்கு உழைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசினார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad