திமுக என்றாலே ஒழுக்கம் கெட்டவர்களின் கட்சி - ஹெச்.ராஜா விமர்சனம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 25 January 2024

திமுக என்றாலே ஒழுக்கம் கெட்டவர்களின் கட்சி - ஹெச்.ராஜா விமர்சனம்.

File Image.

'திமுக உள்ளிட்ட திராவிட இயக்கத்தவர்கள் என்றாலே ஒழுக்கக்கெட்டவர்கள்தான். ராமனின் ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்ற கோட்பாட்டிற்கு இவர்கள் நேர் எதிரானவர்கள்' என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் விமர்சனம் செய்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மதுரை அலுவலகத்தில் அதன் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், 'இந்து அறநிலையத்துறையின் சார்பாக அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இருட்டடிப்பு செய்யப்பட்டது. திராவிட இயக்கத்தவர்கள் என்றாலே ஒழுக்கங்கெட்டவர்கள். ராமனின் ஒரு சொல், ஒரு வில், ஒரு இல், என்ற கோட்பாட்டிற்கு நேர் எதிரானவர்கள். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எதார்த்தமாக கூறிய ஒரு கருத்தை தேவையின்றி பெரிதுபடுத்த நினைக்கிறார்கள். இது கிராமத்து வழக்காறு என்பது என்.ராமுக்கோ, ஷபீர் அகமதுவுக்கோ தெரிய வாய்ப்பில்லை. ஊடகங்களை ஆபாசமாக நேரடியாகப் பேசியவர் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிதான். அதற்காக எந்தப் பத்திரிகையாளரும் ஏன் போராட்டம் நடத்தவில்லை? 


வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் எம்பிக்களின் எண்ணிக்கை குறையும். தமிழகத்தில் தற்போதுள்ள சூழலில் பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் அடையாளம் இல்லாத நிலையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும். வருகின்ற 2047-ஆம் ஆண்டிற்குள் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை முதன்மை நாடாகக் கொண்டு வர பிரதமர் மோடி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். அதற்கு ஏற்றாற்போன்று உரிய ஆவணத்தை மத்திய அரசு வெளியிடும். 


முதலாம் பானிப்பட் போரில் வென்ற பாபர் தன்னுடைய தளபதி மீர்பாய்க்கு உத்தரவிட்டு கி.பி.1528-இல் அயோத்தியில் இருந்த ராமர் கோவில் இடிக்கப்பட்டு ,பாபர் மசூதி உருவாக்கப்பட்டது என்பதை பாபரின் ஒப்புதல் வாக்குமூலமாகவே உள்ளது. ஆனால், இங்கு சிலர் வரலாற்றைத் தவறாக திரிக்க முயல்கின்றனர். உதயநிதி ஸ்டாலினுக்கு வரலாறோ அல்லது சட்ட அறிவோ கிடையாது. மாறாக இந்துக்களின் வாக்கு வங்கியைக் கவர்வதற்காக நாங்கள் ராமருக்கு எதிரி அல்ல என்றும் ராமர் கோவில் குடமுழுக்கை எதிர்க்கவில்லை என்றும் கூறிவிட்டு, ஆனால் மசூதி மீது அந்தக் கோவிலைக் கட்டியதில் உடன்பாடில்லை என்கிறார். 


அறிவாலயம் முன்பாக உள்ள 8 சென்ட் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று முரசொலி நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக உச்சநீதிமன்றம் எஸ்டி ஆணையம் விசாரணை செய்ய அனுமதியளித்துள்ளது. இந்த வழக்கில் முகாந்திரம் இல்லாமல் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியிருக்க முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி அயோத்தி ராமஜன்மபூமி நிலம் இந்துக்களுடையதுதான். தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகளும், கோவில் மேல்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆகையால், ராமர் கோவில் மூலமாக இந்துக்கள் தங்களது உரிமையை நிலைநாட்டியுள்ளனர் என்பதுதான் நீதி மற்றும் தார்மீக அடிப்படையில் உண்மை' என்றார். 

No comments:

Post a Comment

Post Top Ad