இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் எம்.டி. ஷகீல் அக்தர் தெரிவித்ததாவது:- பொதுமக்கள் அரசு நிர்வாகம் தொடர்பான தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்வதன் மூலம் நிலையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்திட முடியும். தகவல் பெறும் உரிமைச்சட்டம் இந்திய குடிமகனாக உள்ள எந்தவொரு சாமானியனுக்கும், அரசின் தகவல்களை பெறும் உரிமையை வழங்குகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு தகவல் வழங்க வேண்டும். அதேபோல , மனுதாரர் தனக்கு வழங்கப்பட்ட தகவல் முழுமையாக இல்லை என்று கருதினால் , மேல்முறையீட்டு அலுவலரிடம் தகவலை கோரலாம். மேல் முறையீட்டு அலுவலர் மனு கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு தகவல் வழங்க வேண்டும். தனிப்பட்டவரின் அந்தரங்கத்தில் விரும்பத் தகாது நுழைவதாக அமையும் பட்சத்தில் தனிப்பட்டவர் தொடர்பான தகவல் வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கலாம்.
மனுதாரர் கோரும் தகவல் தங்களது துறை சாராமல் பிற துறை சார்ந்து இருக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட பொது அதிகார அமைப்பிற்கு மனு பெற்ற 5 நாட்களுக்குள் மாறுதலில் அனுப்ப வேண்டும். உரிய கால வரம்புக்குள் தகவல் அளிக்காத பட்சத்தில் பொதுத் தகவல் அலுவலருக்கு நாளொன்றுக்கு ரூ.250 வீதம் அதிகபட்சமாக ரூ.25000 வரை அபராதம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் இச்சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை காலதாமதமின்றி உரிய தகவல்களை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தகவல் வழங்கும் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் எம்.டி. ஷகீல் அக்தர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆர்.சந்திரசேகர் உட்பட அனைத்துத்துறை சார்ந்த தகவல் வழங்கும் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment