பஸ்சில் இடம் கிடைக்காத மாண வர்கள் ஆபத்தான முறையில் படியில் நின்று பயணம் செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவ்வாறு பயணம் செய்த மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் நகரத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரசு பஸ்கள் மூலம் வருகின்றனர்.


ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் ஒருசில பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக மதுரையில் இருந்து சிந்தாமணி, பொட்டபாளையம், பனையூர் மற்றும் அந்தப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் மதுரை கீழவெளி வீதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். அரசு பஸ்களில் வரும் இவர்கள் பெரும்பாலான நாட்களில் கூட்ட நெரிசலில் செல்லும் நிலை உள்ளது.
போதுமான பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படாததால் பள்ளி விடும் மாலை நேரங்களில் அரசு பஸ் படிகளில் ஆபத்தான முறையில் நின்று கொண்டு பயணம் செய்வதை காண முடிகிறது. இதே போன்ற நிலை மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ளது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி குறிப்பிட்ட வழித்தடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ-மாணவிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக கூடுதல் பஸ்களை விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக மாலை பள்ளிகள் முடிந்து வீட்டுக்கு திரும்பும் மாணவர்கள் தான் அதிகம் பேர் பேருந்துகளில் தொங்கியபடி செல்கின்றனர்.
No comments:
Post a Comment