மதுரை மாவட்டம், தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2023 தொடக்க விழா 29.04.2023-அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தகவல். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 28 April 2023

மதுரை மாவட்டம், தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2023 தொடக்க விழா 29.04.2023-அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தகவல்.


மதுரை தமுக்கம் மைதானத்தில், அரசுப் பொருட்காட்சி – 2023 தொடக்க விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,  நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,  தெரிவித்துள்ளதாவது:-

திருவிழா நகரான மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில், மதுரை சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, அரசுப் பொருட்காட்சியை சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் “அரசுப் பொருட்காட்சி – 2023“ தொடக்க விழா நாளை 29.04.2023 மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது.


செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அரசுப் பொருட்காட்சியை தொடங்கி வைத்து, விழாப் பேருரையாற்ற உள்ளார்கள்.  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளார்கள். இவ்விழாவில், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் , மதுரை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு அரசுத்துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்க உள்ளார்கள்.


இந்தப் பொருட்காட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை,  இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆவின், உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.


அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றில் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குகள் இடம்பெற உள்ளன. மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதேபோல, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன. 


மேலும், தினந்தோறும் இன்னிசை கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அரசுப் பொருட்காட்சி 29.04.2023-அன்று தொடங்கி 45 நாட்கள் தினமும் மாலை 03.45 மணிமுதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும். நுழைவு கட்டமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து அரசுப் பொருட்காட்சியினை கண்டுகளித்திடலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் ,  தெரிவித்தார்.


இந்த ஆய்வின் போது, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங்,  மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி,  வருவாய் கோட்டாட்சியர் என்.சுஜி பிரமிளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இ.சாலி தளபதி , சு.மகேஸ்வரன்  உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad