மதுரைக்கு பன்னாட்டு விமான நிலையம்- மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேச்சு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 20 February 2024

மதுரைக்கு பன்னாட்டு விமான நிலையம்- மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேச்சு.


மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு : மதுரையில் பி. எம்.சி. என்ற தொழிற்சார்ந்த அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரவணகுமார் வரவேற்றார். பி. எம். சி. திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி இயக்குனர் கோபிசன் பேசினார். விழாவில், திருச்சி தொழிலதிபர் அருள் மகேஷ் சிறப்புரையாற்றினார். பி.எம். சி. தொழில் அமைப்பினை குத்து விளக்கேற்றி, தொடங்கி வீட்டு உறுப்பினர்களுக்கு, பதவிப்பிரமாணம் செய்து  தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் சிறப்புரையாற்றினார். 


அப்போது, அவர் பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் தொழில் செய்வது கடினமாக இருக்கிறது. நம்முடைய பொருட்களை விற்பதற்கு கடுமையாக முயற்சி செய்ய வேண்டி உள்ளது. பழைய காலத்தில் பொருள் தேவைப்படுவோர் நம்மை தேடி வருவார்கள். இன்று காலம் மாறிவிட்டது. நாம் டிஜிட்டல் மீடியா உலகத்தில் இருக்கிறோம். நாம் சிரமமான காலகட்டத்தில் இருக்கிறோம். எல்லாத் துறையிலும் வரி கூடிவிட்டது. தொழில் லைசென்ஸ் பதிவு செய்வது உட்பட எல்லாம் சிரமம் ஆகிவிட்டது. 


ஒரு தொழில் தொடங்குவதற்கு 27 லைசென்ஸ் வாங்க வேண்டியதாக இருக்கிறது. மதுரைக்கு புதிய திட்டங்கள் வருவதை விட ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயற்படுத்தினாலே, போதுமானது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 8,500 கோடி ரூபாய் திட்டம் தயாரிக்கப்பட்டு அதை உடனடியாக அதை செயல் படுத்த வேண்டும். மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் உருவாக வேண்டும். 62 வருடம் ஆகியும் இன்னும் பன்னாட்டு விமான நிலையம் உருவாகாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. 


மதுரை சுற்றி இருக்கிற எந்த மாவட்டத்திலும் இன்னும் தரமான தொழிற்சாலைகள் உருவாகவில்லை. உங்களைப் போன்ற இளைஞர்கள் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு எப்படி என்று யோசிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேசினார். முடிவில், பொருளாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad