ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 5 January 2024

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து.


மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அனுப்பபட்டி கிராமத்தில், காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில், பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.

இந்த விழாவில், பலியிடப்படும் ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன. வளரும். இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்டமாட்டார்கள். கரும்பாறை முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக நடந்தது.

காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். பின்னர், நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 101  ஆடுகள் குறிப்பாக கருப்பு ஆடுகள் மட்டும் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன. 100 மூடை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காயந்து, அந்தப் பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோயிலின் தரிசனத்திற்கு வருவர். 


இன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டு அசைவ உணவினை உண்டு மகிழ்ந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad