கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கண்மாய் பட்டியைச் சேர்ந்த முத்துநகை, முருகேசன், சின்னையா, கண்ணன், பாண்டி, சந்தனம் மற்றும் சிலர் உழவடை பாத்தியத்தில் அனுபவித்து வந்த விவசாய நிலங்களை, அந்த பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பதாக கூறி திடீரென ஜேசிபி மூலம் கையகப்படுத்தி வருகின்றனர்.
இதனால், தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள மஞ்சமலை சாமிக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்படுவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த 1985 ஆண்டு முதல் இந்த இடத்தை அனுபவித்து வந்ததாகவும் அதற்கு உழவடை பட்டா ரசீது போட்டு வந்ததாகவும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக தற்போதைய அமைச்சர் மூர்த்தி இருந்தபோது, விவசாய நிலங்களில் உழ அனுமதி அளித்ததாகவும், அதனை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வெங்கடேசன் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் வேண்டும் எனக் கூறி பறித்துக் கொள்வதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும், விவசாய நிலங்களை பறித்து விளையாட்டு மைதானம் அமைப்பதால் தங்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்பு உண்டாவதாகவும் அதனால் ,மாற்று இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு என்று கூறி நிலம் கையகப்படுத்துவதை மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரித்து தங்களுக்கு முறையான ஆவணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். அப்படி வழங்கப்படாத பட்சத்தில், பாதிக்கப்பட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். மேலும் ,இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வரும் திங்கட்கிழமை மனு அளிக்க போவதாகவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment