தொழில் நிறுவனங்களுக்கான, இணைய வழி ஒற்றை சாளர முனையம் தொடர்பான கருத்தரங்கம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 11 April 2023

தொழில் நிறுவனங்களுக்கான, இணைய வழி ஒற்றை சாளர முனையம் தொடர்பான கருத்தரங்கம்.


மதுரை மாவட்டம் தொழில் நிறுவனங்களுக்கான இணையவழி ஒற்றைச் சாளர முனையம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் எல்.பச்சாவ் முன்னிலையில் நடைபெற்றது.

மதுரை கோர்ட்யாட் மேரியாட் விடுதியில், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,  தலைமையில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் எல்.பச்சாவ்,  முன்னிலையில், மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த தொழில் நிறுவனங்களின் பிரிதிநிதிகள் பங்கேற்ற ”தொழில் நிறுவனங்களுக்கான இணையவழி ஒற்றைச் சாளர முனையம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு” நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், பேசியதாவது:- தமிழ்நாடு அரசு தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்காகவும் தொழில் நிறுவனங்களின்  வணிக மேம்பாட்டிற்காகவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க இணையவழி ஒற்றைச் சாளர முனையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நகர மற்றும் ஊரமைப்பு திட்டமிடல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை தொழிலாளர் மற்றும் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பல்வேறு அனுமதிகள் அனுமதி புதுப்பித்தல் போன்ற சேவைகளை சிரமமின்றி பெற முடியும்.


இந்த ஒற்றைச் சாளர முனையம் இணைய வழியில் மின்னனு பதிவேடுகள் மூலம் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மின்னனு முறையில் அனுப்பப்படுகிறது. அனுப்பப்படும் விண்ணப்பங்கள் உரிய கால வரம்பிற்குள் வெளிப்படைத் தன்மையுடன் செயலாக்கப்படுகிறது. ஒற்றை சாளர முனையத்தில் 200-க்கும் மேற்பட்ட அனுமதிகள் 25-க்கும் மேற்பட்ட அரசுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒற்றை சாளர முனையத்தின் மூலம் விண்ணப்பத்தில் உள்ள குறைகளை களைய ஒரே முறை குறைநிவர்த்தி வினவல் அனுப்பப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. 


இறுதி ஒப்புதல் இணைய வழியிலேயே பதிவிறக்கம் செய்யலாம். உரிய கால வரம்பிற்குள் வழங்கப்படாத ஒப்புதல்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட கால அளவிற்கு பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதப்படும். ஒற்றை சாளர முனையத்தின் செயலாக்கத்திற்கு பிறகு தமிழ்நாட்டின் வணிக வசதியாக்கல் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே ஒப்புதல் பெறும் நடைமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இணைய வழியில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால் கால விரையம் தவிர்க்கப்படுகிறது. 


ஒற்றை சாளர முனையத்தின் மூலம் தமிழ்நாட்டில் 18இ000 விண்ணப்பங்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு 15000 விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 865 விண்ணப்பங்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு 771 விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தை  தொழில் முனைவோர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்  பேசினார்.


இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் எஸ்.கணேசன் (மதுரை) கே.மாரிமுத்து (இராமநாதபுரம்) உட்பட அரசு அலுவலர்கள் மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad